அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கம்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை.

+91- 44 – 2617 2326, 93832 01591

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகஸ்தீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சுவர்ணாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் அங்காரக தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வில்வாரண்யம்
ஊர் வில்லிவாக்கம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவன் திருமணம் நடந்தபோது, தென்திசை வந்தார் அகத்தியர். அப்போது இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்தார். அவருக்கு வில்வலன், வாதாபி என்னும் சகோதர அசுரர்கள் தொல்லை கொடுத்தனர். அவர்களை அகத்தியர் வதம் செய்து விட்டார். இதனால் அவருக்கு பிரம்மகத்தி தோசம் உண்டானது. தோசம் நீங்க சிவபெருமானை வழிபட்டார். தொடர்ந்து தனது பூசைகள் சரிவர நடக்க சிவனிடம் பாதுகாப்பு கேட்டார். அவரது பூசைக்கு இடையூறு வராமல் காக்க, வீரபத்திரரை அனுப்பிய சிவபெருமான் அவரது தோசத்தையும் போக்கினார்.

காவலுக்காக வந்த வீரபத்திரர் இத்தலத்தில் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்ட சிவன் அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் மூலவராக இருக்கிறார். அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது, அம்பாள் திருமணக்கோலத்தில் தங்கநகைகள் அணிந்திருந்தாள். எனவே இவள், “சுவர்ணாம்பிகைஎனப்படுகிறாள். இவளது சன்னதி முகப்பில் மகாலட்சுமி, சரசுவதி சன்னதியும், எதிரே நவக்கிரக மண்டபமும் உள்ளது.

வில்வலன் மற்றும் வாதாபியை அகத்தியர் அழித்த தலம் என்பதால் இவ்வூர், “வில்லிவாக்கம்என்றழைக்கப்படுகிறது. வைகாசி பிரம்மோத்சவத்தின்போது அகத்தியர் அசுரர்களை வதம் செய்த வைபவம் நடக்கிறது.

அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப்பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன்மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமிதோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என்பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோச வேளையிலும் சிறப்பு பூசை நடக்கிறது.
இத்தலத்து வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, “ஐசுவர்ய வீரபத்திரர்என்று அழைக்கிறார்கள்.

நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோச பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, “செவ்வாய்க்கிழமை கோயில்என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

பிரகாரத்தில் நடராசர், பைரவர், சுப்பிரமணியர், காசி விசுவநாதர், விசாலாட்சி, வில்வாம்பிகை, ஆதிசங்கரர், நால்வர் சன்னதிகள் உள்ளன. நால்வர் சன்னதியில் அகத்தியர் இருக்கிறார்.

வளர்பிறை பஞ்சமியில் ஆதிசங்கரருக்கு விசேட அபிசேகம் நடக்கிறது.
இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர்.

இத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் நேரடிப்பார்வையில் இருக்கிறார். எனவே இங்கு அம்பிகையை வேண்டிட குரு பார்வை கிடைக்கும், குருவால் உண்டாகும் தோசம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இத்தகைய அமைப்பைக் காண்பது அரிது.

திருவிழா:

வைகாசி விசாகத்தையொட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், கார்த்திகையில் 1008 சங்காபிஷேகம், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.

வேண்டுதல்கள்:

செவ்வாய் தோசத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், பயப்படும் குணம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர்

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வீரபத்திரருக்கு சந்தனக்காப்பிட்டு, வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *