ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை

அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை -625 001

+91 452 2344360

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொக்கநாதர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் கடம்பமரம்
தீர்த்தம் பொற்றாமரை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் உத்தரவாலவாய் (வடதிருவாலவாய்)
ஊர் சிம்மக்கல், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரையை குசேல பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். மன்னன் கல்வியில் மிகச் சிறந்தவன் என்பதை கேள்விப்பட்டு, தமிழ்ச்சங்கத்தில் புலவராக இருந்த கபிலரின் நண்பரான இடைக்காடர், பாண்டியனின் அரண்மனைக்கு சென்று தான் கொண்டு வந்த பாடலால் மன்னனைப் புகழ்ந்து பாடினார். இவரது பாடலால் பொறமைப்பட்ட பாண்டிய மன்னன் சரியாக உபசரிக்காமல் இருந்தான். இதனால் மனம் வருந்திய இடைக்காடர், அங்குள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி,”இறைவா! பாண்டிய மன்னன் தமிழ்புலமை வாய்ந்தவன் என்று நினைத்து அவனைப் பாடினேன். ஆனால், அவனோ பொறாமையால் என்னை அவமதித்து விட்டான். அவன் என்னை அவமதித்தானா, அல்லது உன்னை அவமதித்தானோ என்பது எனக்கு தெரியாதுஎன்று சிவனிடம் விண்ணப்பம் செய்து தணியாத கோபத்துடன் வடதிசை நோக்கி சென்றார்.

இதைக் கேட்ட சிவன், தன்னுடைய லிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியுடன் கோயிலுக்கு நேர் வடக்கே, வைகை ஆற்றுக்கு தெற்கே உள்ள கோயிலில் எழுந்தருளியதுடன், இடைக்காடருக்கும் காட்சி கொடுத்து மன்னனுக்கு பாடம் புகட்டுவதாக கூறினார்.

திருப்பள்ளியெழுச்சி நேரத்தில் இறைவனை தரிசிக்க வந்த பக்தர்கள் அங்கு சிவலிங்கத்தை காணாமல் அதிர்ச்சியடைந்து, இந்த விஷயத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவிக்க வந்தார்கள். அப்போது நகரமே பொலிவிழந்து இருப்பதையும் கண்டார்கள். பதட்டத்துடன் மன்னனிடம் சென்று, “மன்னா! கோயிலில் இறைவனைக் காணோம், நகரமும் பொலிவிழுந்து கிடக்கிறதுஎன்று தெரிவித்தார்கள்.

நடந்ததைக் கேள்விப்பட்ட மன்னன், மிகவும் வருத்தத்துடன்,”இறைவா! நான் செய்த தவறு என்ன? தாங்கள் உமாதேவியுடன் இங்கிருந்து எங்கு சென்றீர்கள்?” என்று இறைவனிடம் கெஞ்சி மன்றாடினான். அப்போது மன்னன் இடைக்காடரை அவமதித்ததால் தான் சிவன் அங்கிருந்து சென்றதாக அசரீரி கூறியது. சிலர் ஒடி வந்து, வைகை ஆற்றுக்கு தென்கரையில் உள்ள கோயிலில் உமாதேவியுடன் சொக்கநாதர் எழுந்தருளியிருக்கும் விஷயத்தை மன்னனிடம் தெரிவித்தனர்.

உடனே, மன்னன் அந்த இடத்திற்கு சென்று, “சொக்கா!, தாங்கள் அங்கிருந்து இங்க வந்து எழுந்தருளியிருப்பதன் காரணம் என்ன? நான் தவறு ஏதும் செய்தேனா? அல்லது வேறு யாரேனும் தவறு செய்து விட்டார்களா?” என கேட்டு மன்றாடி, இறைவனை போற்றித் துதி பாடினான்.

மன்னனின் துதியால் மகிழ்ந்த சொக்கன், “பாண்டியனே!, எல்லாத் தலங்களிலும் இந்த திருவாலவாயே உயர்ந்தது. மேலும் யாம் இருக்கும் இலிங்கங்களிலேயே, எனது தோழன் குபேரன் பூஜித்த இந்த இலிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இன்று முதல் இந்த தலம் உத்தரவாலவாய் என்று அழைக்கப்படும்என்று கூறினார்.

பாண்டியன் இடைக்காடருக்கு செய்த தவறை மன்னிக்க இறைவனிடம் வேண்டினான். இறைவனும் மன்னனை மன்னித்து இனி மேல் நான் இங்கிருந்து செல்லமாட்டேன் என்றும் கூறினார். பாண்டியன் சங்கப்புலவர்களையும், இடைக்காடரையும் அரண்மனைக்கு அழைத்து சென்று பூரணகும்ப மரியாதை செய்து கவுரவித்தான். புலவர்களும், மன்னன் எல்லா செல்வங்களும் பெற வாழ்த்தி சென்றனர்.

இந்த திருவிளையாடல் நடந்த தலம் தான், மதுரை சிம்மக்கல் அருகே உள்ள ஆதிசொக்கநாதர் கோயில். இங்குள்ள சன்னதியில் இடைக்காட்டு சித்தரும் வீற்றிருக்கிறார்.

மேலும் இந்த கோயிலுக்கு ஆதிசொக்கநாதர் கோயில் என்றும், பழைய சொக்க நாதர் கோயில் என்றும், வடதிருவாலவாய் என்றும் பெயருண்டு.

சிவ இலிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த இலிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பணம். இதற்கு அதிபதி குபேரன். இந்த குபேரனே தன்னிடம் உள்ள செல்வம் மேன்மேலும் பெருக சொக்கநாதரை வழிபட்டு, பிரதிஷ்டை செய்த கோயில் ஆதிசொக்கநாதர் கோயில்.

நவகிரகத்தில் புதன் இங்கு வந்து வழிபட்டதால் ஆரம்ப காலத்திலிருந்து இந்த தலம் புதனின் தலமாக விளங்குகிறது.

திருவிழா:

ஐப்பசி பவுர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, பவுர்ணமியில் சாந்தாபிஷேகம் சிறப்பு பூஜை.

வேண்டுகோள்:

வறுமை, திருமணத் தடை மற்றும் குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் ஒரு மண்டலத்திற்குள் சிறந்த பலன் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

புதனுக்கு பரிகாரம் செய்பவர்கள், பாசிப்பருப்பு சுண்டல், பச்சை நிறத்தில் ஆடை, மரிக்கொழுந்து மாலை என எல்லாமே பச்சை நிறத்துடன் வழிபட்டால் தோஷம் நீங்கி நலம் பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *