தவசி ஆண்டி, மேல உரப்பனூர்

தமிழர்கள் முதன்முதலில் பஞ்சபூதங்களில் தலையாயதாகிய சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவைகளை வணங்கினர்.

“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்பிரிந்த நான்.”

எனத் தீபமேற்றி, ஒளியை (சூரியன், சந்திரன், அக்கினி) வணங்கி வந்தனர். உருவ வழிபாடு இல்லை. பின்னர், மூத்தவர்கள், இறைபக்தியை வளர்ப்பதற்காக, தன் குடும்பத்தில் மறைந்த மூத்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு, அதையே மற்றவர்கள் தெய்வமாக வணங்குதல் வேண்டும் என்றனர். குடும்பத்தில் மற்றவரும், மூத்தோர் சொல்லுக்குப் பணிந்து வணங்கினர். இதையே, குலதெய்வம் என்றனர். இதுவே மூலம்.

போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல்லிட்டுப் படையலிட்டு வழிபட்டனர். வீரச் செயல்கள் புரிந்தவர்கள் இறந்ததும் அவர்களையும் வழிபட ஆரம்பித்தனர். இவர்களுக்கு உருவம் கொடுத்து, சாங்கியங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
இவர்களே காவல் தெய்வங்கள்.

 

தவசி ஆண்டி, மேல உரப்பனூர்

************************************

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு வடமேற்கே ராஜதானி மேல உரப்பனூர். இக்கிராமத்தின் வடஎல்லையில் புளியந்தோப்புக்குள் சிறிய திண்டில் அடங்கியுள்ளார் “தவசி ஆண்டி”.


பல்லாண்டுகளுக்குமுன் தலித் மக்களுக்குத் தத்து(வ)க் கடவுளாக வந்து சேர்ந்தார். இப்பொழுதும் சாமியாடி, பூசாரி ஆகியோர்கள் அவ்வி்னத்து மக்களே. ஆயினும் அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சாதி, இனப்பாகுபாடின்றி தவசி ஆண்டியை வழிபட்டு வருகின்றனர். தவசி ஆண்டிக்குத் தலபுராணம் ஒன்றும் தெரியவில்லை. ஆயினும் திருமங்கலம் வட்டரத்திலே அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.


“கண்மாய்க்கரையில் தவசி ஆண்டி சக்தியுள்ள தெய்வமாக அமர்ந்திருந்து, கண்மாயைக் காத்து, கழனி செழிக்க வைத்து, பசியில்லாது கஞ்சி ஊற்றுகிறார்” என்னும் அசைக்கமுடியா நம்பிக்கை வைத்துள்ளனர் அவ்வூர் மக்கள். தங்கள் கழனிகளில் விளையும் விளைச்சலில் ஒருபங்கைக் காணிக்கையாகக் கொடுத்துவிடுகின்றனர். அதன்பின் மிச்சம்தான் வீடுகளுக்குச் செல்லுகிறது.


கார்த்திகை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை தவசிக்குத் திருவிழா. காணிக்கையாய் வந்த நெல்மூட்டைகளை விற்று 50,000க்குக் குறையாமல் வாழைப்பழங்கள் வாங்கப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்படும். இரண்டு எருமை மாடுகளைக் காலையிலிருந்தே பால் கறக்காமல் விட்டு விடுகிறார்கள். இந்த மாடுகளின் மடியில் தவசிப் பூசாரி விபூதி இட்டுவிட்டால் கன்றுகள் மடியைத் தேடி வராதாம்! திருவிழா தினத்தன்று காலை முதலே தவசி கோயில் பூசாரியும் சாமியாடியும் தண்ணீர்கூடப் பல்லில் விழாமல் விரதம் இருக்கிறார்கள்.

ஊருக்குள்ளிருக்கும் (தவசியின்) அணிகலன்கள் உள்ள பெட்டி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். வழிநெடுக மக்கள் பயபக்தியுடன் அப்பெட்டியை வணங்கி மாலை மரியாதைகள் செய்து அனுப்பி வைக்கின்றனர். ஊர் எல்லை வரை பெண்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டு எல்லை வந்ததும் நின்றுவிடுகின்றனர். ஆண்கள் மட்டும் எல்லைக்குள் நுழைகின்றனர். இரவு 12 மணிக்கு எருமைகளைக் கறந்து பால்
எடுக்கின்றனர். அதன்பின் பாலில் பழம் கரைத்து ஆண்டிக்கு முழுக்காட்டு செய்கிறார்கள். அந்த அபிசேக பிரசாதத்தைக் கொண்டு பூசாரியும், சாமியாடியும் தங்களின் விரதத்தை முடிக்கின்றனர்.


தவசிக்கு எதிரே இருக்கும் ஆலமரத்தினடியில் அமைதியாக மக்கள் அனைவரும் அமர்திருக்கின்றனர். பூசாரி எழுந்து”கண்மாய் கரை பெருகணும்; காடு கண்ணி விளையணும்; ஊரு மக்களைக் காப்பாத்தணும்; நல்ல குறி சொல்லப்பா! தவசி ஆண்டி!” என்பார். இதற்குப் பிறகு ஊசி விழுந்தால்கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவும். அடுத்த சில நிமிடங்களில் அவ்வால மரத்திலிருந்து கெளளி(பல்லி) கணீரென ஒலி எழுப்பும். கூடியிருக்கும் மக்கள் கூட்டம் அனைவரின் முகத்திலும் நிம்மதி கலந்த மகிழ்ச்சி மலரும். கெளளி சொல்லச் சற்றே தாமதமானால்,”யாரோ தப்பு தண்டா பண்ணியிருக்காங்க போலிருக்கு. அதுதான் குறி சொல்லத் தாமதம்” என ஒருவர் சொன்னவுடன், ஊர் பெரியவர் முதல் அனைவரும் பூசாரி காலில் விழுந்து,”தெரிஞ்சோ தெரியாமலோ யார் தப்பு செஞ்சாலும் நீ தான்பொருத்துக்கணும்!” எனப் பூசாரி மனமுருக வேண்டுவார். பின்னர் பூசாரியிடம் விபூதி வாங்கி அனைவரும் இட்டுக்கொண்டு அமைதி காப்பார்கள். குறி கூறிவிடுவார் தவசி ஆண்டி. குறி கேட்காமல் மக்கள் ஊர் திரும்புவதில்லை.

சிலஆண்டுகளுக்குமுன் 2 நாட்கள் தவசி ஆண்டி சோதித்து விட்டாராம். பின்னர் வாழைப்பழங்கள் பங்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்கப்படும்.

சாதி சமயச் சண்டைகளை தூண்டிவிட்டுத் தான் வாழும் பெரிய மனிதர்களின் மத்தியில் வேறுபாடின்றி அனைவரும் தவசி ஆண்டி சந்நிதியில் கலந்து வழிபடுவது தவசி ஆண்டியின் மகிமைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *