Category Archives: பரிகார தலங்கள்

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா, பவானி, ஈரோடு மாவட்டம்.

+91- 4256 – 230 192, +91- 98432 48588 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சங்கமேஸ்வரர் (அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்)
அம்மன் வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநணா, பவானி முக்கூடல்
ஊர் பவானி
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன் பூலோகத்தில் உள்ள புனித தலங்களைத் தரிசிக்க விரும்பினான். அவன் ஒவ்வொரு தலங்களாக சென்று தரிசித்த பின் இத்தலத்திற்கு வந்தான்.

அங்கு யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் தவம் செய்வதையும் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்கள் சண்டையின்றி ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்த குபேரன் மிகுந்த ஆச்சரியமடைந்தான். இந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை அறிந்து அவனும் இறைவன் தரிசனம் வேண்டித் தவம் செய்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த சிவனும் திருமாலும் குபேரனுக்கு தரிசனம் தந்தார்கள். அத்துடன் சிவபெருமான் அங்கிருந்த இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி அருள்புரிந்தார்.

அப்போது அசரீரி தோன்றி,”குபேரனே! வேண்டும் வரம் கேள்என்றது. “இறைவா! உனது பெயரான அளகேசன் என்ற பெயரால் இத்தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்என வேண்டினான். அன்றிலிருந்து இத்தலம் தட்சிண அளகைஎன்ற பெயர் பெற்றது. திருமாலும் சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.

அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப்பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு.

இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது).” எனவே இத்தலத்திற்கு திருநணாஎன்ற புராணப்பெயரும் உண்டு.

அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்

அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-200 0679, 94447 47142 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர்
அம்மன் சவுந்தரநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் 8 தீர்த்தங்கள் ஜடாயு தீர்த்தம் முக்கியமானது.
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பண்டாரவாடை, திருவியலூர்
ஊர் திருவிசநல்லூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டித் தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர்ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்கத் திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன.

ஒரு காலத்தில், ஏராளமான பாவம் செய்த ஒருவன், தன் கடைசி காலத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம்,”அழைப்பது யார்?”எனக் கேட்க, நந்தி திரும்பி பார்த்தது. (இத்தலத்தில் நந்திசிலை திரும்பிப்பார்த்த நிலையிலேயே உள்ளது)
அவன் அப்படி அழைத்தது பிரதோஷ தினம்ஆகும். நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது. அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால், இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.

இத்தலம் நான்கு யுகம் கண்ட தலமாகும் எனப் புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர், திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர், துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர், கலியுகத்தில் சிவயோகிநாதர் என இறைவன் வணங்கப்படுகிறார். திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளது. சில சிவாலயங்களில் பெருமாள் தனித்து இருந்தாலும், இங்கே லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் ஜடாயுவின் இறக்கை இத்தலத்தில் விழுந்ததாகவும், அந்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் இருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.