Category Archives: பாடல் பெற்றவை

அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர்

அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 2460660 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாலிங்கம்
அம்மன் பெருமுலையாள்
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் காருண்யமிர்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஆகமம் காமிகம்
புராணப் பெயர் மத்தியார்ச்சுனம்
ஊர் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார். உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார். முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற, உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவதவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார். காட்சி தந்து விட்டு ஜோதி இலிங்கத்தை இறைவனே வழிபடலானார். வியப்பு கொண்டு உமையம்மை, “இறைவனே. பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களேஎன்று வினவ, “உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமேஎன்றார். நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம், இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை, காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர் என்று தலவரலாறு கூறுகிறது.

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம்

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-246 3354, 94434 – 89839 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகேஸ்வரர், நாகநாதர்
அம்மன் பிறையணி வானுதலாள், கிரிகுஜாம்பிகை
தல விருட்சம் செண்பகம்
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநாகேச்சுரம்
ஊர் திருநாகேஸ்வரம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டிக் கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருபாகரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள்.

சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். “பூலோகத்தில் இலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், “நாகநாதர்என பெயர் பெற்றார். அன்று முதல் இது இராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு, இராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் இராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள இராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு. நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான இராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், இராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் மங்கள இராகுவாக அருளுவது விசேஷம். பொதுவாக இராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். இராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் இராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.