Category Archives: பாடல் பெற்றவை

அருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு

அருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு,நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 – 4369 272 470 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
அம்மன் அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி
தல விருட்சம் குராமரம்
தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கடல்), அமுதகிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில்
ஊர் கோடியக்காடு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர்

மிகவும் பழமையானது இந்தக்கோயில். இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், இராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார். இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், இராமபிரான் பின்பக்கமாக சென்று இராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் இராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. இராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு அமிர்தகடேஸ்வரர்என்ற பெயரும் உண்டு.

திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர். அமுதப் பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார். இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம். அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது. மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள்.

அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்

அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம், உத்தர் கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம்.

+91- 8386 – 256 167, 257 167 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
அம்மன் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி
தீர்த்தம் கோடி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோகர்ணம்
ஊர் திருக்கோகர்ணம்
மாவட்டம் உத்தர் கன்னடா
மாநிலம் கர்நாடகா
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர்

இத்தலத்தின் வரலாறு, விபீஷணன் அரங்கநாதரை இலங்கைக்கு கொண்டு சென்றதை கணபதி தடுத்ததை ஒத்துள்ளது.

கணபதியைப் பார்த்தால் பக்தர்கள் தான் தலையில் குட்டிக் கொள்வார்கள். ஆனால், இத்தலத்தில் குட்டு வாங்கிய கணபதி இருக்கிறார். இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட இராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக, கயிலை மலை வந்து, சிவனை வேண்டிக் கடும் தவம் இருந்தான். இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம், “இராவணன் இந்த இலிங்கத்தை கொண்டு சென்றால், தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும்என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் இராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். ஈசன் இந்த இலிங்கத்தை இராவணனிடம் கொடுக்கும் முன், “இராவணா! நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதைக் கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராதுஎனக் கூறி அனுப்பியிருந்தார். அவனிடமிருந்து அந்த இலிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு, இராவணன் சந்தியாவந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து, கணபதியை அழைத்து,”நீ பிரமச்சாரி வேடத்தில் இராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. இராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் இலிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான். நீ அவனிடம், இலிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால், இலிங்கத்தைக் கீழே வைத்து விடுவேன் என்று சொல்என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் கவிய, இராவணன் சந்தியாவந்தனம் செய்வதற்காக கையிலிருந்த இலிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டுச் சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண இலிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த இலிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை இராவணனை அழைத்தார். அப்படி அழைத்தும் இராவணன் வராத காரணத்தினால் இலிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த இலிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டிக் கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர். சந்தியாவந்தனம் முடித்து வந்த இராவணன், இலிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு கணபதியின் தலையில் கோபத்தில் குட்டினான். தன் 20 கைகளாலும் இலிங்கத்தை தூக்கி பார்த்தான். முடியாமல் போனதால் அங்கேயே விட்டுவிட்டு இலங்கை சென்றான். பிறகு தேவர்கள், தேவசிற்பியை அழைத்து இலிங்கத்தைச் சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிவனை மகாபலேஸ்வரர்என்றும், நதிவடிவிலுள்ள அம்பிகையை தாமிரகவுரிஎன்றும் அழைக்கின்றனர்.