Category Archives: வீரபத்திரர்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், தாராசுரம்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், தாராசுரம், கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 92454 18708, +91- 97905 25241.

மாலை 5- 6 மணி. ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. பகலில் சுவாமியை தரிசிக்க முன்னரே அர்ச்சகரிடம் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.

மூலவர் வீரபத்திரர்
அம்மன் பத்திரகாளி
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தாரகவனம்
ஊர் தாராசுரம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

உத்தரகாண்டம் பாடிய ஒட்டக்கூத்தர், வீரபத்திரரின் பக்தராக இருந்தார். அவர் இராஜராஜ சோழனிடம் வீரபத்திரருக்கு கோயில் கட்டும்படி கூறினார். மன்னனும் அதை ஏற்று, இங்கு கோயில் கட்டினான். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் உள்ள வீரசைவ மடத்தில் தங்கியிருந்த ஒட்டக்கூத்தர், தினமும் இங்கு வந்து வீரபத்திரரை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் ஒட்டக்கூத்தர் தங்கியிருந்த மடத்தின் வழியே ஒருவர், தேவாரப்பாடல் பாடியபடி சென்றார். ஒட்டக்கூத்தர் அவரிடம் பாடலின் பொருள் கேட்டார். அவரோ பொருள் தெரியாது என்றார். இதைக்கேட்ட ஒட்டக்கூத்தர் கோபத்தில் அவரை அடிக்கவே, அவர் இறந்து விட்டார். இறந்தவரின் உறவினர்கள் ஒட்டக்கூத்தரை தேடி வந்தனர். நடந்ததை மன்னனிடம் கூறிய ஒட்டக்கூத்தர், ஓரிடத்தில் மறைந்து கொண்டார். நற்புலவரை இழக்கக்கூடாது என்று எண்ணிய மன்னன், ஒரு பல்லக்கில் தன் மகனை அமர்த்தி, “இவர்தான் ஒட்டக்கூத்தர். கொடிய செயல் செய்த இவரை நீங்கள் பார்ப்பதுகூட பாவம்தான். எனவே பல்லக்கில் வைத்தே கொன்றுவிடுங்கள்என்று சொல்லி அனுப்பி வைத்தான். கூட்டத்தினர் சந்தேகப்பட்டு பல்லக்கைத் திறந்தபோது மன்னனின் மகன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது ஒட்டக்கூத்தர் ஓடிவந்து,”நான் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. தினமும் தாராசுரம் வீரபத்திரரை தரிசிப்பது என் வழக்கம். இன்று என்னால் அந்த கடமையை நிறைவேற்ற முடியவில்லை. எனவே நான் இறக்கும் முன் சுவாமியை வழிபட அனுமதியுங்கள்என்றார். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒட்டக்கூத்தர் வீரபத்திரரை தரிசித்துவிட்டு, அருகிலிருந்த முளைச்சாளம்மன் (மோட்சாளம்மன்) சன்னதிக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். கூட்டத்தினர் அவருக்காக காத்திருந்தனர். நள்ளிரவாகியும் அவர் வெளியே வரவில்லை. கூட்டத்தினரும் அவரை விடுவதாக இல்லை. கலங்கிய ஒட்டக்கூத்தர் அம்பிகையிடம் தன்னை காக்கும்படி வேண்டினார். அம்பாள் அவருக்கு காட்சி தந்து, “உனது மானசீக தெய்வமான வீரபத்திரர், தட்ச யாகத்தை வென்றதை பற்றி பரணி பாடு. அவரருளால் நீ காப்பாற்றப்படுவாய்என்றாள். ஒட்டக்கூத்தரும் தக்கயாகப்பரணிபாடினார். மறுநாள் அதிகாலையில் தான் எழுதியதை ஒரு ஜன்னல் வழியாக வெளியில் இருந்தவர்களிடம் கொடுத்தார் ஒட்டக்கூத்தர். அதை படித்தவர்கள் மகிழ்ந்து, ஒட்டக்கூத்தரை பாராட்டிவிட்டுச் சென்றனர். அதன்பின் அந்நூலை முறையாக அரங்கேற்றம் செய்தார் ஒட்டக்கூத்தர். தக்கயாகப்பரணி இயற்றப்பட்ட தலம் இது.

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருவானைக்காவல்

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருவானைக்காவல், திருச்சி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலைப் பெருக்க பத்து புதல்வர்களைப் பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன். இவன் சிவபெருமானைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுமையாகத் தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்றான். அந்த வரங்களுள் ஒன்று உமா தேவியைத் தனது மகளாக அடைந்து அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது. அந்த வரத்தின்படி இமய மலைச்சாரலில் காளிந்தி நதியில் வலம்புரிச் சங்கு உருவில் தவம் புரிந்து கொண்டிருந்த உமா தேவியை, தட்சன் கண்டான். அவன் அந்த சங்கினைக் கையில் எடுத்த மறுகணம், சங்கு வடிவம் நீங்கி அழகிய பெண் குழந்தையானாள் உமா தேவி. அவளை எடுத்து வந்து தாட்சாயணி என்ற பெயரைச் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தான் தட்சன். தனது ஆறாவது வயது முதலே சிவபெருமானைத் தனது கணவனாய் அடையும் நோக்குடன் ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து, சிவபெருமானைக் குறித்து கடுமையாக தவம் இருக்கத் தொடங்கினாள் உமாதேவி. அவளது தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், கூடிய விரைவில் அவளை மணம்புரிவதாய்க் கூறி மறைந்தார். அவர் கூறியது போல் தட்சன் கன்னிகாதான மந்திரங்களைக் கூறி அம்பிகையின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான். அடுத்த கணம் சிவபெருமான் திடீரென மறைந்தார்.