அருள்மிகு மூங்கிலணைக் காமாட்சி அம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி

அருள்மிகு மூங்கிலணைக் காமாட்சி அம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி – 625602. தேனி மாவட்டம்.

+91-4556- 235 511 (மாற்றங்களுக்குட்பட்டது)

தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை கோயில் திறந்திருக்கும்.

மூலவர்: – மூங்கிலணைக் காமாட்சி

தல விருட்சம்: – மூங்கில் மரம்

தீர்த்தம்: – மஞ்சள் ஆறு

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – தெய்வனாம்பதி

ஊர்: – தேவதானப்பட்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

மூங்கிலணைக் காமாட்சியைப் போற்றி வையாபுரி புலவர் காமாட்சிபதிகம்என்னும் நூல் இயற்றியுள்ளார்.

இப்பகுதியில் கொடுங்கோலாட்சி புரிந்த வச்சிரதத்தன் என்னும் அசுரனை கொல்வதற்கு துர்க்கையம்மனாக வந்து வதம் செய்த காஞ்சிகாமாட்சியம்மன், அசுரனைக் கொன்ற பாவம் நீங்க மஞ்சள் நீராடினாள். பின்பு தலையாறு நீர்வீழ்ச்சிக்கருகே மூங்கில் புதருக்குள் தவம் இருந்தாள். எதேச்சையாக இதை பார்த்துவிட்ட பசு மேய்க்கும் ஒருவருக்கு கண் பார்வை பறிபோனதையறிந்த அவ்வூர் நிலக்கிழார் பூசை செய்து வழிபட்டார். அம்மன் அசரீரியாக, ஒரு வாரம் கழித்து ஆற்றில் வரும் வெள்ளத்தில் மூங்கில் பெட்டியில் அமர்ந்து வரும் என்னை எடுத்து வழிபட்டால் கண்பார்வை தெரியும் என்று கூற, அதுபடியே பெட்டி வந்தது. அதை எடுத்து வழிபட்டு அந்த இடத்தில் சின்னக் குச்சு ஒன்று கட்டி வழிபட்டனர். மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைந்து நின்றதால் மூங்கிலணைக் காமாட்சி அம்மன் என வழங்கலாயிற்று.

தேவதானப்பட்டி கோயிலுக்கு மேற்கே 3 கி.மீ., தொலைவில் மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள அருவியில் அம்மாமெச்சு என்று ஒரு இடம் உள்ளது. அங்கிருந்துதான் இந்த அம்மன் இருந்த பெட்டி மிதந்து வந்ததாக கூறப்படுகிறது.

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்று விளங்குவது தேவதானப்பட்டி மூங்கிலணைக் காமாட்சி அம்மன். காஞ்சி காமாட்சியே மூங்கிலணைக் காமாட்சி அம்மனாக இருந்து வருவதே இதற்குக் காரணம்.

இந்த தேவதானப்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவே உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு சிலையோ விக்ரகமோ இல்லை. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள அடைக்கப்பட்ட கதவிற்குத்தான் பூசை நடைபெறுகிறது. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் படைக்கப்படுகிறது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடலாம்.

இங்கு ஆடு, மாடு, கோழி பலியிடுவது கிடையாது. பொங்கல் வைக்கும் பழக்கமும் இல்லை.

துள்ளு மாவுதான் சிறப்பான நைவேத்தியம்.

அடைத்த கதவுக்குதான் பூஜை என்றாலும் கதவுக்கு உள்ளே 16 கால் மண்டபமும் அதன் முன் கருவறையும் உள்ளது. அங்கு அம்மன் பெட்டிக்குள் இருப்பதாக வருடம் ஒருமுறை கருவறைக் கூரை மேயும் ராசகம்பளத்தார் கூறுகின்றனர்.

கனகராசு பாண்டியன், தனராசு பாண்டியன் பரம்பரை அறங்காவலர்கள். கன்னடியர் இனத்தவர் பூஜை செய்கின்றனர். காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருப்பது போல் இங்கும் அம்மன் பூசை மண்டப மேல் விதானத்தில் கௌளி உருவம் உள்ளது. காஞ்சியைப் போல் இங்கும் கௌளி குறி கேட்பது வழக்கமாக உள்ளது.

இங்கு மூலவரோ, உற்சவரோ கிடையாது. எனவே 5 நாள் திருவிழா காலத்தில் முதல் நான்கு நாட்கள் கோயில் அருகில் உள்ள ஆற்றுக்கு மூங்கில் தட்டில் மா, பலா, வாழைப்பழம், தேங்காய், மாலை, அபிசேக சாமான் எடுத்து செல்வர். கோடாங்கி நாயக்கர் மேள தாளத்துடன் பூசைப் பொருள்களை கோயிலுக்கு எடுத்துவந்து இரவு முழுவதும் வைத்திருப்பார். மறுநாள் காலையில்தான் பூசை செய்கின்றனர். இதற்குப் பள்ளயம் என்று பெயர். 5வது நாள் வரும் பள்ளயம் சமீன்தார் வீடு செல்லும். நெய் வாங்கி ஊற்றுவது நேர்த்திக்கடனாக உள்ளது. திருவிழாக் காலத்தில் சேரும் நெய்யை வருடம் முழுவதும் தீபத்திற்கு உபயோகிப்பர். இந்த நெய்பானைகளில் ஈயோ எறும்போ மொய்ப்பதில்லை.

காமாக்காள் திவசம்:

காமாக்காள், பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி சமீன்தார் மனைவி. இவர் தன் கணவர் மறைவிற்குப் பின் ஒரே மகனுடன் கோயில் கட்டடத்தில் தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்தார். இந்த காமாக்காள் அம்மனிடம் நேரில் பேசும் சக்தி பெற்றவர். இரவில் தனியே கோயிலுக்கு செல்வதற்குப் பயந்த மகன், தானும் அம்மனைப் பார்க்கத் தாய் தடுத்தும் கேளாமல் தாயுடன் சென்றான். இதனால் அவன் தலை வெடித்து இறந்தான்.

காமாக்காள் தை மாதம் ரதசப்தமியில் மறைந்தார். அம்மனின் வாக்குப்படி ராசகம்பள நாயக்கர் அவருக்கு திவசமிட்டனர். அதுமுதல் ஒவ்வொரு வருடமும் ரதசப்தமியில் கோயிலில் காமகாக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது. காமாக்காள், அவரது மகன் இருவரின் சமாதியும் கோயிலுக்கு கிழக்கே கொஞ்சம் தூரத்தில் உள்ளது. திவசம் முடிந்த அன்றே கோயிலின் முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

மாசி மாதம் 15 நாள் மகாசிவராத்திரி பெருந்திருவிழா. இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். இத்திருவிழா தென் தமிழ்நாட்டின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று. ஆடிமாதம் ஆடிப்பள்ளயம் – 3 நாட்கள். ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழா இது. இவை தவிர சித்திரை வருடப்பிறப்பு, விசய தசமி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல் ஆகிய விசேட தினங்களில் பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலை மோதும்.

பகைவர்களை வெல்லும் சக்தி, திருமண வரம், குழந்தை வரம், தொழில் விருத்தி, மன அமைதி ஆகியவற்றை இத்தலத்து அம்பாள் தருகிறாள்.

புதிய காரியங்களை தொடங்க அனுமதி பெற கௌளி குறி கேட்டலும் இங்கு உண்டு.
நெய் வாங்கி ஊற்றுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், முடி காணிக்கை, ஆராதனைகள் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாகச் செய்யலாம். இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *