Tag Archives: மணமேல்குடி

அருள்மிகு வடக்கூர் அம்மன், மணமேல்குடி

அருள்மிகு வடக்கூர் அம்மன், மணமேல்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

பத்தினியாக வாழ்ந்த நல்லதங்காள், வறுமையின் கொடுமையால் தன் குழந்தைகளைக் கிணற்றில் வீசி, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தை சொல்லில் வடிக்க இயலாது. கடும் பஞ்சம் தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், குடிக்கக்கூட தண்ணீர் இன்றி மனிதர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். சுமார் பன்னிரண்டு வருடங்கள் மக்களைக் இப்பஞ்சம் வாட்டியதாம். இந்த காலகட்டத்தின் இறுதி ஆண்டில்தான் நல்லதங்காள் இறந்தாள்.

இதே ஆண்டில், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைச் சீமையில் அந்த அதிசயம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்குக் கிழக்கே 37-வது கி.மீ. தூரத்தில் உள்ளது மணமேல்குடி. பெயருக்கு ஏற்றாற்போல் திரும்பிய பக்கமெல்லாம் மணல்.

இந்த ஊர், கிழக்கு கடற்கரையை உச்சி முகர்ந்தபடி உள்ளது. கிராமமா, நகரமா என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி இருக்கும் இந்த ஊரின் வடக்குத் திசையில் இருக்கும் ஒரு பகுதியை, வடக்கு மணமேல்குடி என்றும் வடக்கூர் என்றும் சொல்கிறார்கள்.

முற்காலத்தில், இந்தப் பகுதி(வடக்கூர்) இலுப்பை மரக் காடாக இருந்தது. புதர்கள் நிறைந்த இந்த வனத்துக்குள் எவரும் போக மாட்டார்கள்.