அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கீழப்பாவூர்

அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கீழப்பாவூர், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 94423 30643 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நரசிம்மர்

தாயார்

அலர்மேல்மங்கை

தீர்த்தம்

நரசிம்ம தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கீழப்பாவூர்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும் வைகுண்ட நாதனான பெருமாளிடம் பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்ம ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். பொதிகைமலையில் சித்ரா நதிக்கரையில், தவம் செய்துவரும்படியும், தக்க சமயத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருள்வதாகவும் அவர் கூறினார். நால்வரும் பெருமாளைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தனர். அந்த தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. இதையடுத்து பிரதோஷ வேளையில் நரசிம்மர், இரண்ய சம்கார கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தார். கர்ஜனை செய்த பெருமாளைக் கண்ட நால்வரும் மெய்மறந்து தரிசித்தனர். பிற்காலத்தில் பெருமாள் தரிசனம் தந்த இடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அமைக்கப்பட்ட மூர்த்தி மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்து விட்டது. இதனால், நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய மார்பில் திருமகளைப் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினர்.

மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்காரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன.

நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோர் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கின்றனர். நரசிம்மரின் தலைக்குமேலே தர்மத்தை நிலைநாட்டும் வெண்கொற்றக்குடையும், இருபுறமும் வெண்சாமரமும் உள்ளன. நரசிம்மப் பெருமாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். குடைவரை பாணியில் கருவறை மிகச்சிறியதாக உள்ளது. ஆலயத்தின் முன்பகுதியில் கிழக்கு நோக்கிய சன்னதியில் அலர்மேல்மங்கை தாயார் சமேதராய் பிரசன்ன வெங்கடாஜலபதி வீற்றிருக்கிறார். ஆலயத்தின் முன்னுள்ள தீர்த்தம் நரசிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளிலும், பிரதோஷத்திலும் சிறப்பு பூஜை.

கோரிக்கைகள்:

கடன்களிலிருந்து நிவாரணம் பெறவும், தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறவும் இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

நெய்தீபம் ஏற்றி நரசிம்மரை பதினாறு முறை வலம் வந்து வந்தும், பானகம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர். நரசிம்மருக்குரிய நட்சத்திரமான சுவாதிநாளிலும், பிரதோஷத்திலும் இளநீர் மற்றும பால் அபிஷேகம் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *