அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்-635 124, கிருட்டிணகிரி(கிருஷ்ணகிரி)

+91- 94436 18811(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – விநாயகர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பாகலூர்

மாவட்டம்: – கிருட்டிணகிரி(கிருஷ்ணகிரி)

மாநிலம்: – தமிழ்நாடு

சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பாதத்தை காட்டுகிறார். இந்த விநாயகரை வழிபட்டால் சிவசக்தியை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயில் பிற கோயில்களைப்போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது சிறப்பு. கருவறையில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் சுவாமி, அம்மன், பிள்ளையார்,

நாரதர், சுப்ரமணியர், மற்றும் காளையுடன் கூடிய கைலாயக் காட்சி காண்பவரைக் கொள்ளை கொள்ளும். கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியான மண்டபமும் அமைந்துள்ளது. மேல்தளத்திற்குச் செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. பிள்ளையாரின் தரிசனத்தால் நம் வாழ்க்கையின் தரம் படிப்படியாக ஏறுவது போல், படிகளின் மீது ஏறிப் பார்த்தால் அங்கு முழுமுதற்கடவுள் நமக்கு அருள்பாலிக்கத் தயாராக இருப்பது போல் வீற்றிருக்கிறார்.இவருக்கு இருபுறமும் கற்பக விநாயகரும், மாணிக்க விநாயகரும் உள்ளனர். சித்தி விநாயகருக்கு எதிரில் அவரது வாகனமும் பலி பீடமும் அமைந்துள்ளது.

விநாயகரின் வலதுபுறத்தில் தாய் சொர்ணாம்பிகையும் அவளது இருபுறமும் மீனாட்சி, விசாலாட்சியும் அருள்பாலிக்கிறார்கள்.

முருகன், அம்மன் கோயில்களுக்கே உரித்தான பால்குட வழிபாடு இங்கு விசேஷம். விநாயகர் சதுர்த்தியன்று பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுக்கின்றனர்.

சுற்றுப்பிரகாரத்தில் தண்டாயுதபாணியும் அவருக்கு இருபுறத்தில் பாலமுருகனும், திருச்செந்தூர் முருகனும் உள்ளனர். ஐயப்பன் 18 படிகளுக்கு மேல் அமர்ந்துள்ளார். பிரகாரத்தின் முடிவில் நவக்கிரகங்கள் அனைத்தும் தத்தம் தேவியருடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்கள்.

திருவிழா:

சித்திரை மூல நட்சத்திரத்தில் வருடம்தோறும் திருமுழுக்காட்டு.

விநாயகர் சதுர்த்தி, சங்கடகர சதுர்த்தி, தீபாவளி, மார்கழி பள்ளியெழுச்சி, தைப் பொங்கல், தை அமாவாசை.

அம்மனுக்கு பவுர்ணமி பூஜை, நவராத்திரி பூஜை. முருகனுக்கு மாதக்கார்த்திகை, சஷ்டி, தைப்பூச பூசை.

இங்கு எந்த கிரகத்தின் தோடமாக இருந்தாலும் தோட நிவர்த்தி பூசை செய்யலாம்.

கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் ஒரு வளர்பிறை சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி, பின் ஒவ்வொரு சதுர்த்தியிலும் ஒவ்வொரு விளக்காக குறைத்து தீபமேற்றும் பழக்கம் உள்ளது. விளக்கின் எண்ணிக்கை குறைவது போல பக்தர்களின் கடன் சுமை குறைகிறது என்று நம்புகிறார்கள். எனவே இவரை கடன் தீர்க்கும் கணபதிஎன்றும் செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *